Monday, April 6, 2015

கிறுக்கல்கள்



மார்ச் 24,2015

உனை பிரிந்து செல்லும் இரவுகள்
எத்தனை கொடுமையானதென்பதற்கு நிலா சாட்சி...


ஏப்ரல் 6, 2015

தொலை தூரப் பயணங்களில்
தொலைந்து போகிறேன் உன் நினைவுகளில்.. 

பூக்களே பொறாமை கொள்ளுங்கள்
இலைகளும் பேரழகு தான்

Sunday, June 20, 2010

காதல் தோல்வியும் சூசைடு சபாவும்...

கரண், இருபது வயது இளைஞன், ஒல்லியான உருவம்,
நீள மூக்கு ,அரும்பு மீசை, காற்றில் பறக்கும் ஹேர் ஸ்டைல்,
முகத்தில் எப்போதும் தாராளமான முகப் பருக்கள், பருக்களை  கிள்ளுவதற்கே  அவனுக்கு நேரம்  சரியாக இருந்தது .

சிகரெட் தண்ணி என்று சந்தோஷமாக வாலிபத்தை  அனுபவித்துக் கொண்டிருந்தவன்,அவனது நண்பர்கள் சிலரைப் போல் ஒரு வயது மூத்த பெண் மீது காதல் கொண்டான், சில நாள் சென்ற பின் ஒரு வயது இளைய பெண்ணோடும் காதல் வந்தது,அப்போதே பிரச்சினைகளும் தொடங்கியது.முதல் காதலி பிரிந்தாள், இரண்டாமவள் அவனை ஏற்கவில்லை.

அவனது மாமா குவைத்திலிருந்து வந்திருந்தார், அவரிடம் சென்று சொன்னான்,"மாமோ லவ்வு ஊத்திகிச்சு, என்ன பண்றது?"

 மாமா அவனை முடி திருத்தகத்திற்கு அழைத்து  போய்  அவனது அழகிய ஹேர்  ஸ்டைலை ஒட்ட வெட்டி மொட்டை அடிப்பது போல் ஆக்கினார், வெளிய வந்து 'மயிரு போச்சுன்னு சொல்லிட்டு போய் கிட்டே இரு',ஒரு காதல் போச்சுன்னா...அடுத்தது, அதனால கவலைப் பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே' என்றார்.

இரவு பதினொன்று மணி:
கரணும்    நண்பர்களும் மஸ்கட்டில் இருந்து விடுமுறைக்கு வந்தவரை தட்டி எழுப்பி , "அண்ணே குடிக்குறதுக்கு  பைசா இல்ல, ஒரு முன்னூறு ரூபா தாங்க" என்றார்கள்.

எரிச்சலோடு  வெளியே வந்தவர் மீண்டும் வீட்டிற்குள் போய் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு,"தம்பிகளா இனிமேல் இந்த மாதிரி அர்த்த ராத்திரியில் வீட்டிற்கு வந்து தொந்தரவு பண்ணாதீங்க" என்று அனுப்பி வைத்தார் .

பூட்டிய டாஸ் மாக்கின் ஷட்டரை இடித்தார்கள்..ஷட்டர் சிறிதாக உயர்ந்தது...
ஒரு கை மட்டும் வெளியே நீண்டது, பணத்தை கொடுத்து ஒரு ஃபுல் வாங்கினார்கள்.

மூன்று பேரும் நன்றாக குடித்து விட்டு, ஆளுக்கொரு புறம் சென்று உறங்க போய் விட்டார்கள்.கரணுக்கு மட்டும்  உறக்கம் வரவில்லை , கையில் கிடைத்த ஏதேதோ 'இருபதிற்கும் அதிகமான' மாத்திரைகளைவிழுங்கி  விட்டு...ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் போய் படுத்துக் கொண்டான் .

இரவில்  கண் விழித்த நண்பன், கரணை   காணாததால் ,சந்தேகத்தில் அவனை தேடி ஓடினான்.கரண் வழி அருகில் வாயில் நுரை தள்ளி கிடப்பதை கண்டவன், அவனை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தான்.

கரணின் வயிற்றை கழுவி அவனை பிழைக்க வைத்தார்கள்.

அவன் கண்விழித்து பார்க்கும்போது,
படுக்கையின் அருகில் குளுகோஸ் பவுடரும்  ,பிஸ்கட்டும் இருப்பதை கண்டு மகிழ்ந்தான்.பசி வயிற்றை கிள்ளியதால், உடனே பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான் .


அவனை பார்க்க வந்த அவனது தந்தை கோபத்தோடு சொன்னார்,
"அவனையும் , அவன் முடியையும் பாரு...பிச்சக் காரன் மாதிரி...". 
அவன் தற்கொலை செய்ய முயற்சித்ததை விட அவனது முடி ஒட்ட வெட்டப் பட்டு சீயான் விக்ரம் போல் காட்சி அளித்ததே  அவருக்கு கோபத்தை வரவழைத்திருந்தது.

நண்பர்கள் வந்தார்கள், "என்ன கரண் பிஸ்கட் சாப்புடிறியா, நல்லா சாப்புடு டீ...ஒனக்கு ஒரு பிஸ்கட் பிளாஷ் பேக் சொல்றோம் அதுக்கு முன்னாடி இந்த க்ளுகோசையும் குடி" என்றார்கள்.அவனும் குடித்துக் கொண்டே கதை கேட்பதற்கு தயாரானான் .


பத்து வருடங்களுக்கு முன்பு அதே மருத்துவமனையின்,அதே படுக்கையில் :


காலை ஆறு மணி:
"நான் உயிரோடு தான் இருக்கிறேனா?" மெதுவாக கண்களை திறந்து கொண்டே, அருகில்  நின்று கொண்டிருந்த நண்பனிடம் கேட்டான் அருண் .

 "ஆமா நாங்க தான் உன்னை பொழைக்க வச்சோம், என்ன பாக்குற???
அவ்வளவு  சீக்குரத்துல எல்லாம் சாக விட மாட்டோம்.சங்கர் கடை'ல டீ குடிச்ச பாக்கி எல்லாம் யாரு குடுக்குறது?" ஐ சி யு' வில் மேல் நர்ஸ்  ஆக பணிபுரியும் ஜெய்  அவனை கலாய்த்தான்.

"நீ சாகுறதுல யாருக்கும் எந்த கவலையும் இல்ல...
சும்மா "ஸ்டொமக் வாஷ்"(Stomach wash ) பண்ணி ப்ராக்டீஸ் பண்ணி பாத்தோம்...
நீ பொளச்சிட்ட அவ்வளவு தான் டீ...

சரி எனக்கு டூட்டி  முடிஞ்சுது , கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறமா வந்து பாக்குறேன்,பசிச்சின்னா இந்த க்ளுகோஸ் பவுடர் கலக்கி குடி, பிஸ்கட் சாப்பிடு" சொல்லி விட்டு ஜெய்  நகர்ந்தான்.

இடது கையில் குளுகோஸ் போய்கொண்டிருந்தது, சிறுநீர் போவதற்காக சிறுநீர் குழாயிலும் டியூப் போட்டிருந்தார்கள்.ஐ சி யு அறையின் , ஏ சி குளிரிலும் அவனுக்கு வியர்த்தது,  எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தேனோ? கடைசியாக என்ன செய்தேன்...குழம்பினான் அருண் .


முந்தைய  இரவு :
அவளிடம் எட்டாவது முறையாக காதலை சொல்லியும் அவள் ஏற்க மறுத்துவிட்டிருந்தாள். மாலை நண்பர்களோடு சொல்லி கலங்கினான்...
லீலா இல்லன்னா ஒரு மாலா...இதுக்கெல்லாம் கவலபட்டுகிட்டு???
போய் வேற ஏதாச்சும்  ஃபிகர் மடியுதான்னு பாரு மச்சான் ...எல்லோரும் ஒரே போல் சொல்லிவிட்டு போனார்கள்.

அவன் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். மாநிறம் ,சாதாரண உயரம், உதட்டை இளித்து நகைச்சுவையாக பேசுவான்,மிமிக்ரி செய்வான்.யாரோடும்  ஒரு முறை பேசினால், அவர்கள் பேசுவது போல் , நடப்பது போல் செய்து காண்பித்து விடுவான்.

மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் போல் இண்டர்காமில் பேசி அங்குள்ள நர்சுகளை சிரிக்க வைத்து மிகவும் சகஜமாக பழகி கொண்டிருந்தான்.

அப்போது தான் அவனுக்கு அங்குள்ள ஒரு பெண்ணோடு  காதல்  வந்தது.
அவளோ அவனை சிறிதேனும் சட்டை செய்யாமல்  இருந்தாள்.
பல முறை தன் காதலை சொல்லியும் அவள் ஏற்கவில்லை.
அவனால் தாங்க முடியவில்லை, ஊரோரமுள்ள அரளிக்காய் செடியில் பத்து பெரிய காய்களை பறித்துவிதைகளை எடுத்து நன்றாக அரைத்து குடித்து விட்டான்.

வாயில் நுரை தள்ளி கிடந்தவனை நண்பர்கள்  தான் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும்  அளித்தார்கள்.

நினைவலைகளில் இருந்து திரும்பியவனுக்கு பசி வயற்றை கிள்ளியது.
அருகிலிருந்த பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான்...குளுகோஸ் பவுடரை டம்ளரில் தட்டி தண்ணீர் கலக்கி குடித்தான்.மிகவும் ஆசுவாசமாக இருந்தது.

மாலை  ஜெய் மற்றும் அவனது நண்பர்கள் எல்லாரும் அவனை பார்க்க வந்தார்கள்.

"ஜெய் உங்களுக்கெல்லாம் எவ்வளவு பாசம்?
பசி உயிர் போனப்போ, நீ வாங்கி தந்த பிஸ்கட்டும்
குளுகோஸ் பவுடரும் தான் என் உயிரை காப்பாத்திச்சு ...
உங்களுக்கெல்லாம் எப்புடி நான் கைம்மாறு பண்ணப் போறேன்? "
என்று சொல்லி கொண்டே அழத் தொடங்கினான்.

"அந்த குளுகோஸ்'காக  நன்றி சொல்லனும்னா  பக்கத்து படுக்கைல இருந்த தாத்தாவுக்கு தான் நீ நன்றி சொல்லணும்" என்றான் ஜெய் .

'எங்கே அந்த தாத்தா ?' என்று இரண்டு படுக்கைகளுக்கும் இடையே இருந்த  திரையை விலக்கி  பார்த்தான்,தாத்தாவை காணவில்லை.

"அவர் நேத்து ராத்திரியே இறந்துவிட்டார்,அவர் பாடிய கொண்டுபோனதும் இந்த குளுகோஸும்  பிஸ்கட்டும் அங்கேயே இருந்துச்சு, அவர் வெறும் ரெண்டு பிஸ்கட் தான் சாப்பிட்டிருந்தார்  அதனால   தான் உன் படுக்கை பக்கத்துல மாத்தி வச்சேன்" ஜெய் சொல்லி முடிக்கவும்  நண்பர்கள் அனைவரும் கோரசாக சிரித்தார்கள்.

"அடப் பாவி இதுக்காடா என்னோட  வயிற கழுவி காப்பாத்துனீங்க? "  என்று சாப்பிட்டதை வெளியே கொண்டு வர முயற்சித்து தோற்றான்.

"சூசைடு பண்ற நாயெல்லாம், இத சாப்பிட்டதுக்கு போய் வருத்தப்படுத்து பாரு...
இது ஒரு சின்ன தண்டனை தான், அமைதியா டிஸ்சார்ஜ் ஆகி வெளிய வா...   இனியாவது  வாழ்க்கைய வாழப் பாரு.... சொம்மா பொண்ணுங்களுக்காக சாகுறேன் பேர்வழி இப்புடி செஞ்சன்னா...நாங்களே உன்ன கொன்னுடுவோம் ..........மகனே " என்று சொல்லி நண்பர்கள்   அனைவரும்  வெளியேறினார்கள் .




ஃ ப்ளாஷ் பேக் கேட்டுக் கொண்டிருந்த கரணும் வாந்தி எடுக்க முயற்சித்து தோற்றான் ...


ICU'ல் உள்ள அந்த படுக்கை இப்போதும்  இது போன்ற காதல் மன்னர்களுக்காக காத்துக் கொண்டே இருக்கிறது  !!!!


வேறு பெண்ணே இல்லாத உலகத்தில் தானே 
நீ ஒருத்திக்காக ஏங்க வேண்டும்?

தமிழ் சினிமாவில் நடப்பது போலெல்லாம்
வாழ்க்கையில் நடப்பதில்லை.

காதல் யதார்த்தத்தை மிஞ்சும் போதே
தற்கொலைகள் அரங்கேறுகின்றது.


காதல் வாழ்வதற்கு ஊக்குவிக்க வேண்டுமே தவிர சாவதற்கல்ல!!!


Saturday, May 8, 2010

முறிந்த கிளை ஒன்று பூக்குதே!


 என் வாழ்க்கையின் வசந்த காலம் அது, கல்லூரி நாட்கள். மிகவும் ஜாலியாக  "நர்சிங்" மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆறுமாதக் கால ஆபரேஷன் தியேட்டர் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. நான் ஆப்பரேஷன் தியேட்டரில் வேலை செய்வதை மிகவும் விரும்பினேன், தினமும் புதுவிதமான அறுவை சிகிச்சைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தேன்.  ஒரு  நாள் காலை ,  சர்ஜிகல் வார்டில்(Surgical ward) இருந்து இண்டர்காம் அழைப்பு "கிறிச்சான்... உடனே வா ஒரு அட்மிஷன் வந்துள்ளது, உனக்கு கேர் ஸ்டடி (Care Study) வேண்டுமென்று சொல்லி இருந்தாய் அல்லவா " என்றார்கள், இன்-சார்ஜ்  சிஸ்டர். உடனே ஆபரேஷன் தியேட்டர் பச்சை உடைகளை மாற்றி விட்டு சர்ஜிக்கல் வார்டிற்கு ஓடினேன்.


முப்பது  வயது வேலு-ஆட்டோ டிரைவர் , ஆட்டோ விபத்துக்குள்ளாகி  அட்மிட் ஆகி இருந்தார். கேர் ஸ்டடி என்றால் ஒரு நோயாளி மருத்துவமனையில் அட்மிட் ஆனது முதல் டிஸ்சார்ஜ் ஆகும் வரைக்கும் உள்ள அனைத்து சிகிச்சைகளிலும் என் பங்களிப்பு இருக்க வேண்டும் ,அதை  டாகுமென்ட் செய்து சமர்ப்பிக்கவும்  வேண்டும். எனவே வேலுவின் ஃபைல் எடுத்து நோட்டமிட்டேன். 


இடது  முழங்காலில் இரண்டு எலும்புகளும் உடைந்திருந்தன  (Both bone Fracture), வலது காலில் ரத்த ஓட்டம்  (Insufficient Blood Supply to the Limb ) இல்லாததினால்  அதை ஆம்ப்புடேஷன் (Amputation) செய்து  துண்டித்து   மாற்ற வேண்டும்  என்றிருந்ததைக் கண்டு வருத்தப் பட்டேன் .


வேலுவிடம் சென்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். "ஹலோ பாஸ், நான் மூன்றாமாண்டு மேல் நர்சிங் ஸ்டுடென்ட்  (Male Nursing Student) , நீங்க டிஸ்சார்ஜ் ஆகுறவரைக்கும் நாம டெய்லி மீட் பண்ணுவோம்" என்றேன். மிகுந்த வேதனையிலும் என்னை நோக்கிப் புன்னகைத்தார்.


" டாக்டர் என்ன சொன்னாரு?" என்றதற்கு, "இன்ஜெக்ஷன் போட்ருக்காங்க, இரத்த ஓட்டம் நாளைக்கு காலைக்குள்ள  வரலன்னா , காலை  எடுக்க வேண்டி இருக்கும்'னு சொன்னாங்க " என்றார்.


அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே சிஸ்டர் வந்து " அவுட் புட் இல்ல, யூரின் காதிட்டர் போட வேண்டும்" என்றார்கள். சரி என்று தலை அசைத்து விட்டு காதிட்டர் மற்றும் உபகரணங்கள்  எடுத்து வந்தேன்.


வேலுவின் அருகில் எனது நண்பர் ஒருவர் நின்றிருந்தார். அவர் காதலித்த பெண்ணுக்காக " அரளிக்காய் அரைத்து சாப்பிட்டு மிகவும் பிரபலமானவர்". நான் அவரைப் பார்த்து புன்னைகைத்துக்  கொண்டே " வேலுவை உங்களுக்கு தெரியுமா?" என்றதற்கு "ஆமாம் நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள்" என்றார்.


 "யூரின் போறதுக்காக டியூப் போட வேண்டும், நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா ?" என்றேன். "இல்ல ...நான் டியூப் போடுறது பாத்தது இல்ல, நானும் இருக்கேனே" என்றார்,  நான் வேலுவைப் பார்த்தேன். வேலு "பரவா இல்ல ... அவன் இருக்கட்டும் என் நண்பன் தானே ?" என்றார்.


வலி அறியாமல் இருப்பதற்கான சைலோகைன் ஜெல்'லை  முதலில் சிறுநீர் குழாயில் இன்ஜெக்ட் செய்தேன், நண்பர் கவனமாக பார்த்துக் கொண்டே இருந்தார், பின்பு மெதுவாக காதிட்டர்   டியூப்பை நுழைத்தேன் . பின் காதிட்டரை யூரின்  சேகரிப்பதற்கான பை யுடன் (Uro -Bag) இணைத்து கிளாம்பை ரிலீஸ் செய்தவுடன் , சிறுநீர் சிறிது ரத்தத்தோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் யூரின் பையை நிரப்பிக் கொண்டிருந்தது.


பொத்தென்று சத்தம் கேட்டு திரும்பினால், ரத்தத்தை  கண்ட நண்பர் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். தூரத்தில் இருந்து கவனித்த  இரண்டு தாதியர்கள் ஓடி வந்து அவரை மெதுவாக எழுப்பி நர்சஸ் ரூமிற்கு (Nurses Room) அழைத்து சென்றார்கள். நான் என் வேலையை முடித்து விட்டு, அவரிடம் சென்று " என்ன ஆச்சு...என்னஓய் நீரு பெரிய சண்டியர் மாதிரி பேசுவீரு, இவ்வளவு தானா நீரு?" என்று  கிண்டல் செய்தேன்.


 மறுநாள் காலை வரை ரத்த ஓட்டம் இல்லாததினால் வலது  காலை ஆம்புட்டேஷன் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது . காலையில் அவசரமாக குளித்து கிளம்பி கொண்டிருந்தேன், எனது ஜூனியர்கள் இருவர் உறங்கி கொண்டிருந்தனர். என்  நண்பன்  மெதுவாக "ஏன் மாப்ள  டென்ஷனா இருக்குற?" என்றதற்கு   "ஒண்ணுமில்ல என்னோட  கெயர் (care)  பேஷண்டுக்கு இன்னைக்கு ஆம்புட்டேஷன் பண்ணி காலை எடுக்குறாங்க டேய், அசிஸ்ட் பண்ணனும் இல்ல? மத்தவரு வேற ஏதாச்சும் சொல்லிக் கிட்டே   ஆபரேஷன் பண்ணுவாரு...அதான் டென்ஷன்" என்றேன். "தலைவராப் பண்றாரு? இன்னைக்கு தியேட்டர்'ல கொண்டாட்டம் தான் " என்றான் நண்பன் .


வார்டிற்கு ஓடினேன், வேலுவை சுத்தப் படுத்தி ஆபரேஷன் தியேட்டர்'க்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தேன். அவரது எட்டு  மாத கர்ப்பிணி மனைவி அழுது  கொண்டேஅருகிலிருந்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தனியாக  அழைத்து "அவருக்கு தைரியமூட்ட வேண்டிய நீங்களே இப்படி அழலாமா?" என்றேன்.


"எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது, இரண்டு மாதங்களில் எனக்கு குழந்தைப் பிறந்துவிடும் , என்னை கவனிப்பதற்கு இவர்   மட்டும் தான் இருக்கிறார் , இந்த நேரத்தில்  அவருக்கு இப்படி ஆகிவிட்டதே" என்று கலங்கினார்கள். "ஆப்பரேஷனுக்குப்  பின் செயற்கை கால் பொருத்தி விடுவார்கள், பின்பு அவருக்கு பழையது போல் நடக்கலாம்" என்று  ஆறுதல் கூறினேன்  .


ஸ்ட்ரெச்சரில் வேலுவை படுக்க வைத்து,  இரண்டு பேர் தள்ளிக் கொண்டு வர, அவரது  ஃபைலை ஒருக் கையிலும் , குளுகோஸ் பாட்டிலை மற்றொரு கையிலும் பிடித்து கொண்டே தியேட்டரை அடைந்தேன். தியேட்டர்  நுழை வாயிலில் ஆர்த்தோ டாக்டர்  (எலும்பு முறிவு சிகிட்சை நிபுணர் )  வேலுவின் தந்தைக்கு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படும் என்று விவரித்துக் கொண்டிருந்தார், "குட் மார்னிங் டாக்டர்" என்றதற்கு, "என்னய்யா...கையில பாட்டில்  எல்லாம் பிடிச்சிட்டு வர்ற ?"  என்று எப்போதும் போல கிண்டல் செய்தார்.


அனஸ்தீஷியா (Anesthesia  ) கொடுக்கப் பட்டு, வேலு மயக்க நிலைக்குப் போன பின் ஆபரேஷன் தொடங்கியது, எனது சீனியர் ஒருவர் மெயின்  அசிஸ்டன்ட் ஆக (Scrub Nurse ) சர்ஜனுக்கு உதவிக் கொண்டிருந்தார், நான் வேலுவின் காலை தூக்கி பிடித்துக் கொண்டிருந்தேன், மூட்டிற்கு கீழ்வரைக்குமாக கொஞ்சம் தோலை  மட்டும்  ஃபிளாப் (flap )  ஆக வைத்து விட்டு, காலை அறுத்து கொண்டிருந்தார் டாக்டர்.


சிறிது நேரத்தில் வேலுவின் கால் தனியாக என் கரங்களில், நான் டாக்டரைப் பார்த்தேன், அருகிலுள்ள பக்கெட்டில் போடுமாறு கூறினார். நடுக்கத்தோடு  "உயிரோடிருக்கும் மனிதனின், இறந்து போன காலை" பக்கெட்டில் இட்டேன்  . ஆப்பரேஷன்   சக்சஸ்!!!
வேலு அறுவை சிகிச்சை  வார்டிற்கு மாற்றப் பட்டார்,  மாலை வரை மயக்கத்திலே இருந்தார். மீண்டும் இன்ஜெக்ஷன் கொடுத்து உறங்க வைக்கப் பட்டார்.


அன்றிரவு தூக்கம் வராமல் மிகவும் வருந்தினேன் , வேலுவை பற்றிய எண்ணங்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது, சில வருடங்களுக்கு முன் வேலுவின்  தம்பிக்கும் ஒரு விபத்தில் அகப்பட்டு வலது கை ஆம்புட்டேஷன்  செய்திருந்தார்களாம். அவர் இப்போது செயற்கை கை பொருத்தி உள்ளாராம். மனதிற்கு கஷ்டமாகவே  இருந்தது.

 மறுநாள் காலை போய் காலையில் கொடுக்க வேண்டிய ஆண்டிபயோட்டிக்ஸ் இன்ஜெக்ஷன் முதல்  மருந்துகள் அனைத்தும் கொடுத்து  டாக்குமென்ட் செய்தேன் . அவர் மனைவியும் அவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்த படி அழுது கொண்டே இருந்தார்கள். எனக்கும் அது மிகவும் தர்ம சங்கடமான நிலையாக இருந்தது. "டாக்டர் வந்து பாக்க வரும்போது இப்புடி அழுது கொண்டு  இருக்க கூடாது" என்றேன், இருவரும் 'சரி' என்றார்கள். வார்டிலிருந்து வெளியேறி நடந்தேன் , பின்னால்  இருந்து  "கிறிச்சான்" என்றொரு குரல் கேட்டு திரும்பினேன், என் தோழி வந்து கொண்டிருந்தாள்.


"ஹேய்... சீனியர் கைகள் தான் அப்டி கூப்பிடுறாங்கன்னா...நீயுமா?" என்றேன். "நான் கூப்பிடாம வேற யார் கூப்பிடுவா? " என்று உசுப்பேத்தினாள்.


"என்ன டா உன்ன பாக்கவே முடியல...சார் ரொம்ப பிஸியோ ?" என்றாள்.


"ஆமா கொஞ்சம் பிஸி தான் , கேர் ஸ்டடி ...அந்த பேஷன்ட் பத்தி தான் உன்கிட்ட பேசணும்..." என்றேன்.


 மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, கணவனுக்கு ஒரு கால் துண்டிக்கப் பட்டால் அந்த தம்பதிகள் எவ்வளவு வேதனைப் படுவார்கள், அவர்களை எப்படி தேற்றுவது என்று கேட்டேன். அவள் 'பைபிள் கதைகள் சொல்லிக் கொடு, ஒ பி டி (OPD ) ல நோயாளிகளுக்காக  வச்சிருக்கிற பைபிளுல ஒண்ணு எடுத்து படிக்க குடு' என்று ஆலோசனைக் கூறினாள்.


"அவர் ஹிந்து டீ...அப்புறம் மதமாற்றத்துக்கு முயற்சிப் பண்றேன் அப்டி இப்பிடி ன்னு பிரச்சினை ஆகிடப் போகுது"  என்றேன்.


"ஹேய்  அப்டி பாத்தா நானும் தான் ஹிந்து...நான் பைபிள் வாசிக்கலியா ...சும்மா குடு...பிரச்சினை ஒன்ணும் வராது , அவருக்கு இப்போது கொஞ்சம் டைவெர்ஷனல்  தெரபி (Diversional Therapy) தான் தேவை , பைபிள் படிக்குறது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்  " என்றாள்.
                                                
மாலை டூட்டி முடிந்ததும் குளித்து புறப்பட்டு , OPD யில்(Out Patient Department) இருந்து  ஒரு சிறிய பைபிளை எடுத்து கொண்டு வேலுவை பார்க்க சென்றேன். "துண்டிக்கப் பட்ட காலின் பெருவிரலில் வலி ஏற்படுவதாக சொல்லி ரகளை பண்ணிக் கொண்டிருந்தார் , அதிர்ச்சி அடைந்தேன்.

முன்தினம் தான், நான்  "ஃபான்றம் லிம்ப்  (Phantom Limb ) "  பற்றி படித்திருந்தேன் . ஆம்ப்புடேஷன் செய்து கால் துண்டிக்கப் பட்டப் பின் நோயாளிகளுக்கு தோன்றும் ஒரு பிரமை வேதனை, துண்டிக்கப் பட்ட கால் இருப்பதைப் போலவும், அதில் வேதனை வருவதாகவும் உணர்வார்கள் என்று. வேலுவை  சமாதானப் படுத்துவதற்குள் போதுமென்றாகி விட்டது. 

மெதுவாக பேச்சை  மாற்றினேன் "வேலு சொல்றேன்னு தப்பா நினைக்கலைன்னா ஒரு பைபிள் கதை சொல்லட்டுமா?" என்றேன்.  "சொல்லுங்க பாஸ், நமக்கு வேதக் கோயிலும்,சாமி கோயிலும் எல்லாமே ஒண்ணு மாதிரி தான் "என்றார் .

நான் உடனே கதை சொல்ல ஆரம்பித்தேன் "யோபு'ன்னு ஒருத்தரப் பத்தின கதை ஒண்ணு இருக்கு, அவர் ரொம்ப நல்லவரா இருந்தார், அதனால சாத்தான் அவரை சோதிப்பான், அவரோட குழந்தைகள், ஆடு மாடுகள் எல்லாம் இறந்து போய் விடும்...ஆனாலும் யோபு கடைசி வரைக்கும் கடவுளை   மறுதலிக்காம அவர வணங்கினனால  , கடவுள் அவருக்கு எல்லாத்தையும்    திரும்ப கொடுத்தார், அப்புறம் அவரு நாலு தலை முறை பிள்ளைகளையும் பாத்தப் பிறகு ரொம்ப நாள் உயிரோட இருந்தாராம்" . 

அதனால சோதனைகள் எல்லார்  வாழ்க்கையிலயும் வரத் தான் செய்யும். தளர்ந்து விடக் கூடாது, இந்த துன்பத்துக்கெல்லாமா  சேர்த்து கடவுள் உங்களுக்கு நல்ல காலத்த தருவாருன்னு சொல்லி, அந்த சிறிய பைபிளை அவர் கையில் கொடுத்தேன்  .

"சிரித்துக் கொண்டே அதை வாங்கியவர், தினமும் மாலை டூட்டி  முடிந்ததும் வந்து இது மாதிரி கதை சொல்வீங்களா?" என்றார். கண்டிப்பாக வருவேன் என்றேன். 

இரண்டு நாட்களுக்குப் பின் வேலுவிற்கு  இடது காலில் ஆப்பரேஷன் செய்து ப்ளேட் வைக்கப் பட்டது. அன்று மாலை  என்  நண்பர்கள்  சிலரை  அவருக்கு அறிமுகப் படுத்தினேன், தினமும் நானும் நண்பர்களும் அவரைப் போய் பார்ப்போம் , சிரித்துப் பேசுவோம். 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவ மனையிலேயே இருந்தார்,  அவரது மனைவிக்கும் அங்கேயே குழந்தைப் பிறந்தது . என் வகுப்பு தோழிகள் அவரது மனைவிக்கு மிகவும் உதவி செய்தார்கள்.  பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி போய் விட்டார்.
                                                             

படிப்பை முடித்து, சில காலம் அங்கே பணிபுரிந்தேன், பின்னர் கேரளாவிற்கு மாற்றப் பட்டேன். வேலுவை நான் மறந்தே போயிருந்தேன்.  ஒரு நாள் நான் பழைய நண்பர்களைப் பார்ப் பதற்காக மருத்துவ மனைக்கு  போய் விட்டு, அருகிலுள்ள பேரூந்து நிறுத்தத்தில் , பேரூந்திற்காக  காத்திருந்த போது, என் அருகில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். என்னை பார்த்து புன்னகைத்தார் , நானும் புன்னகைத்தேன். ஆனால் எனக்கு யாரென்று புரியவில்லை  ( எனக்கு ஞாபக மறதி அதிகம்).


என் குழப்ப பார்வையை கவனித்த அவர் "என்னை தெரிய வில்லையா? நான் தான் வேலு என்று வேட்டியை விலக்கி  தன் செயற்கை காலை காண்பித்தார். என்னையுமறியாமல் அவரை கட்டி பிடித்தேன், கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.


"என்னால் இப்போது நடக்க முடியும் பாஸ்" என்று, அங்கும் இங்குமாக ஊன்று கோல் உதவியுடன் நடந்து காண்பித்தார்.


" நான் பிசியோதெரபிக்கு  வரும்போதெல்லாம் உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களோடு விசாரிப்பேன் , என்  மகனுக்கு இப்போது ஒரு வயதாகிறது, வாங்க டீ சாப்பிடலாம் " என்று அழைத்து சென்றார். இப்போது சிறிய கடை ஒன்று வைத்திருப்பதாக சொல்லி சந்தோஷமடைந்தார்.


சிறிய சிறிய பிரச்சனைகளை எல்லாம் , உலகிலேயே கொடுமையான விஷயமாக கருதி பயந்து கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வருவதற்கு வேலுவின் வாழ்க்கையும்  ஒரு உதாகரணம் ஆனது. 
           
            நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். 
            போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். 
            திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும், 
            புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை.  
           


இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நமது துயரங்களும்தான்.

- சார்லி சாப்ளின்  

Thursday, April 29, 2010

மறக்க முடியாத ஓர் இரவு

                              

 பன்வேல் ,மும்பையிலிருந்து 22 கீ .மீ தொலைவில்  மும்பை-பூனே நெடுஞ்சாலையில் இருக்குற  ஊர் .  . அங்கிருந்து ஷேர் ஆட்டோ'வில் போனால் அரைமணி நேரத்தில் "திருபாய் அம்பானி மருத்துவமனை" வந்து விடும் .  அது ரிலையன்ஸ்  நிறுவனத்தின் ஊழியர்களுக்கான மருத்துவ மனை. அங்கு நான் அவசர சிகிச்சை  பிரிவில் இணைந்து ஒரு வார காலமாகி இருந்தது. அப்போது எனக்கு ஹிந்தி அறவே தெரியாத காலம் ( இப்போ மட்டும் தெரியுமாக்கும் என்கிறீர்களா?).  ஏதோ நமக்கு தெரிந்த ஆங்கிலம் மற்றும் மலையாளம் மூலம் சக ஊழியர்களுடன் ( தாதியர்கள்)  பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்த மருத்துவ மனையின் அருகில் வேறேதும் கடைகளோ, வீடுகளோ கிடையாது. மருத்துவமனையின் அருகிலேயே , ரிலையன்ஸ்  நிறுவன ஊழியர்கள் மற்றும்  மருத்துவ மனை ஊழியர்கள் தங்குவதற்காக  500 க்கும் அதிகமான   குடியிருப்புகள்  இருந்தன  .  அந்த குடியிருப்பில் ஒரு மேல் மாடியில் எனக்கும் ஓர் அறை தந்திருந்தார்கள் .
                                                          
அன்று டூட்டி முடிந்து என் அறைக்கு வந்தேன், என்னோடு தங்கி இருந்த மராட்டிய ஆண்-தாதியர் (Male Nurse ),  ஏற்கனவே நைட் டூட்டிக்கு போயிருந்தான்.  அப்போது சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கான முயற்சி தொடங்கி வெற்றிகரமான  ஒரு வாரக் காலமாகி இருந்தது. போர் அடிக்கிறதே , என்ன செய்வது என்றறியாது  குழம்பி இறுதியில், குடியிருப்புக்களுக்கு நடுவே அமைந்திருந்த டிப்பார்ட்மெண்டல்  ஸ்டோர் போகலாமென    நடக்க துவங்கினேன் . 

அங்கு போய் ஷேவிங் கிரீம் , பேஸ்ட்  போன்ற தினசரி தேவைக்கான சாமான்கள் வாங்கி வந்தேன். பின்பு இரவு உணவு அருந்துவதற்காக  மருத்துவமனைக் கருகிலுள்ள கான்டீன் போகலாம் என்று நடந்த போது, எதேச்சையாக மருத்துவமனை  டெலிபோன் பூத்தை  கண்டேன். சரி ... ஊரில் நண்பர்களுக்கு போன் செய்யலாமென அங்கு சென்று, அங்கிருந்த ஹிந்தி காரரிடம்  "ஐ வான்ட் டு கால் எஸ் டி டி  " என்றேன், காபினுக்குள் போய்   ஃபோன் செய்ய சொல்லி கை அசைத்தார்.




சாதரணமாக பெல் அடித்தவுடன்  ஃபோன் எடுத்து ஹலோ சொல்லும் நண்பர் ஃபோனை  எடுக்காமலே இருந்தார் , ரிங் போய்க்  கொண்டே இருந்தது. மீண்டும் மீண்டும் முயற்ச்சித்தேன், எடுத்தவுடன்  "ஹெலோ அண்ணே எப்டி இருக்கீங்க " என்றேன். மறுமுனையிலிருந்து " தம்பி... அது வந்து  அவ இறந்துட்டாளாம்" என்றார். "அப்டியா அண்ணே , எப்போ?" என்று சாதாரணமாக கேட்டேன். "இன்னைக்கு தான் தம்பி, "பாடிய ஆம்புலன்சுல ஊருக்கு கொண்டு வந்துட்டு இருக்காங்களாம்" என்றார்.  "பாடியை" என்ற  வார்த்தையை கேட்ட  பின்பு தான் சுருக்கென்று தலைக்குள் ஏதோ மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தேன். சில மாதங்களாகவே மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவள் இறந்து விட்டாள்.

மூன்றரை வருடமாக காதலித்த என்னவள் உயிரோடு இல்லை என்று உணர்ந்தவுடன்  என் கைகள் மெல்ல நடுங்க தொடங்கியது. கால்கள் மரத்துப் போவதை போல்  உணர்ந்தேன் . காக்காய் வலிப்பு வந்தவன் போல கால்கள் இழுத்துக்கொள்ள தொடங்கியது. இதயம் இரண்டாய் கிழிந்ததைப் போல் உணர்ந்தேன்.

"அண்ணே பேசிக்கிட்டே இருங்க, எனக்கு கை  கால் எல்லாம் நடுங்குது" என்றேன். "ஒண்ணுமில்ல தம்பி, நான் பேசிட்டே  இருக்கிறேன் " என்றார் . ஏதேதோ பேசினோம் , ஒன்றும் தலையில் ஏறவில்லை. "ஊருக்கு வருகிறாயா " என்றார்.  "அவளை நோயாளியாகக் கூட பார்க்க மனமற்ற நான் எப்படி  உயிரற்றவளாக பார்த்து தாங்கி கொள்வேன் ? அவளைக் குறித்த அழகான  நினைவுகளோடு வாழ்ந்து கொள்கிறேனே "  என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.


"ஒருவேளை பொய் சொல்லி இருப்பாரோ" என தோன்றியது . பெரியப்பா வீட்டிற்கு அழைத்தேன், "டேய்  நான்  தான்  தான் பேசுறேன், சொல்றத  அமைதியா கேளு" என்றான் மறு முனையில் என் அண்ணன். அவனால் முடிந்த அளவுக்கு  ஏதேதோ ஆறுதல்  சொன்னான் , அவன் அழுவது எனக்கு நன்றாக புரிந்தது.  "நீ ஏன் அழுகிறாய் , எல்லாம் என் தலை எழுத்து " என்றேன்.
"அவ நம்ம வீட்டுப் பொண்ணுடா" என்றான் , அவளை எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்திருந்ததை சொன்னான்  .

இறுதியாக, நான் தற்கொலை செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி கொடுத்த பின் தான் இணைப்பை துண்டித்தான்.  காபினிலிருந்து  வெளியே வந்தபோது என் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதை   கவனித்த கடைக்காரர், "க்யா ஹுவா?" என்றார். "குச் நஹி "என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்  .


நன்றாகத்  தானிருந்தாள், தலை வலி என்று மருத்துவரை பார்க்க போனவளுக்கு தலையில் கட்டி, கான்செர்  என்றார்கள். விதி விளையாடி விட்டிருந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவளை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க கூட தைரியமில்லாது  மும்பைக்கு ரயில் ஏறியதற்க்காக   என்னை நானே நொந்து கொண்டேன். 


மருத்துவ மனையை விட்டு இறங்கி சாலையில் நடக்க தொடங்கினேன், ஒரு கிலோமீட்டர் சென்றபின்  தூரத்தில் டான்ஸ் பார்'கள் தெரிந்தன, அருகில் சில குடிசை வீடுகளும். குடிசை பகுதியில் எதாவது சிகரெட் கடை இருக்கிறதா என்று பார்த்தேன். சிறிய தேடலுக்குப்  பின் ஒரு பெட்டி கடையை  கண்டுபிடித்தேன்  , ஹிந்தி தெரியாததினால் நானே இரண்டு பாக்கெட் சிகரெட்  மற்றும் தீப்பெட்டியை எடுத்தேன், கடையிலிருந்த சிறுவன் என்ன பேசினான் ஒன்றும் புரியவில்லை ,அவன் தந்த மீதி சில்லறையை வாங்கி கொண்டு மீண்டும்  அறையை நோக்கி நடந்தேன் .  

சொல்லி அழுவதற்கு கூட யாருமில்லாது தவித்தேன், படுக்கையில் விழுந்தேன், என்னையும்  அறியாமல் அழுகை பீறிட்டது. படுக்கையிலிருந்து கீழே விழுந்தேன் உருண்டு புரண்டேன்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி கடவுளே, இப்படி எல்லாம் ?" என்று எல்லோரும்  கேட்பது போல் நானும் கேட்டேன் கடவுளிடம்.

"பாவம் ...எத்தனை மாதாங்களாக வலியோடு வாழ்ந்து வந்தாள்?ஹூம்  அவளுக்கு இனி மேல் வலிக்கவே வலிக்காது" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.


சிகரெட்டுகளை புகைத்து தள்ளினேன்... நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது, உறக்கம் வரவில்லை, திடீரென்று இண்டர்காம் ஓசை கேட்டு, போன் எடுத்தேன் "ஆன் கால் பிரதர், ஒரு பேஷண்ட் டினே   போம்பேக்கு கொண்டு போகணும் , வேகம் வா" என்றாள் மலையாளி நர்ஸ் எதிர் முனையில் . சரி என்று சொல்லி விட்டு வாட்ச்சைப் பார்த்தேன்,சரியாக  12 .30 நள்ளிரவு.

நான் மருத்துவமனையை நோக்கி நடக்க தொடங்கி சில நொடிகளில் என் எதிரே  ஆம்புலன்ஸ் வருவதை கண்டு ஆச்சரிய பட்டேன்.

டிரைவர் என்னை நோக்கி  "பேஷன்ட்  வீட்டில் இருக்கிறார், நாம் போய் அவரை எடுத்துக் கொண்டு ஏசியன்  ஹார்ட் சென்டர் , பாந்திராவிருக்கு போக வேண்டும் " என்றார்.சரியென்று தலை அசைத்து  கொண்டே அம்புலன்சில் ஏறினேன் .

                                
ஆம்புலன்ஸ் ரிலையன்ஸ்  நிறுவனத்தின் ஒரு ஊழியரின் வீட்டின் முன் நின்றது. பேஷண்டை ஆம்புலன்சில் படுக்க வைத்து, கார்டியாக் மானிட்டரில் இணைத்தேன், ப்ளட் பிரஷர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அவருக்கு  நாற்பது வயது தானிருக்கும்.   அவரது மனைவி போகும் வழியெல்லாம் மானிட்டரை பார்த்துக் கொண்டே வந்தார்.

மானிட்டரில் தோன்றும் அலைகளை காட்டி " இப்போது ஏன் மாறுகிறது ஏதாவது பிரச்சினையா" என்று பதட்டமாக ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே வந்தார். நான் "ஒன்றுமில்லை  ஆம்புலன்ஸ் குலுங்குவதால்  ஏற்படும் மாற்றமே" என்று ஆறுதல் சொல்லி கொண்டே போனேன். பாந்த்ரா ஏசியன் ஹார்ட் சென்டரை அடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைத்து விட்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டேன் " அப்பாடா நோயாளியை உயிரோடு மருத்துவமனையில் ஒப்ப்டைத்தாயிற்று, பிழைத்துக் கொள்வார்" என்று எண்ணி  கொண்டே ரோட்டில் இறங்கினேன்.

மும்பை நகரம் அமெரிக்கா போல் தோற்றமளித்தது. ஆம்புலன்சின் உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்ததினால் இருந்ததினால் வெளியே இடங்களை பார்க்கவில்லை , நான் எங்கே இருக்கிறேன் என்றே குழப்பமாக இருந்தது. மிக அழகான கட்டிடங்கள், ஆனால் ரசிக்க தான் மனமில்லை.

வாழ்க்கையில் யாரும் பயணம் செய்ய விரும்பாத வாகனம் தானே  ஆம்புலன்ஸ் என்று நினைத்துக் கொண்டே அதில் ஏறி அமர்ந்தேன். ஆம்புலன்ஸ்  பன்வேலை  நோக்கி விரைந்து  கொண்டிருந்தது. எனக்கு ஹிந்தி தெரியாது என்பதாலோ என்னவோ ஆம்புலன்ஸ் டிரைவர் அதிகம் பேசவில்லை, கட்டிடங்கள் வேகமாக நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளைப் பற்றிய நினைவலைகள் நெஞ்சில் நெருப்பாய் வீசியது . என் கரம் கோர்த்து வாழ்க்கையின்  எல்லை வரைக்கும் வருவேன் என சொன்னவள், இன்று ஒன்றுமே சொல்லாமல் போய் விட்டாள்.  நான் அவளோடும், அவள் என்னோடும் பேச வேண்டும் என்று நினைத்திருந்த அனைத்திற்குமே விடை தெரியாமலே போய் விட்டது. நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த போது என்னை தேற்றியவள், நான் வெற்றி அடைவதைப் பார்ப்பதை ஏன் தவிர்த்தாள்???

ஃ போன் செய்யும் போது  "இன்று என்ன சாப்பிட்டாய்  "   என்று கேட்பாள்.

"சிக்கன் சாப்பிட்டேன்" என்றால் "நானும் சிக்கன் தான் சாப்பிட்டேன்.... வாட் எ கோ இன்சிடென்ட் இல்ல" என்பாள்.

இப்போது நான் அம்புலன்சில் போய் கொண்டிருக்கிறேன்,  அவளும் தான்  ஆம்புலன்சில் போய் கொண்டிருக்கிறாள், என்னவொரு கோ-இன்சிடென்ட் இல்ல???



வாழ்கையில்...சுவடுகளான காதல்


காதல்....
      என்ற படகில் சயனித்து கொண்டுயிருந்த பொழுது...
பிரிவு.....
      என்ற சவப்பெட்டியில் மூடி வைத்தாய்....


ன்னை வெறுமையாக்கி சென்றாய்.... 
எனினும்,சுவடுகளான சித்திரமாய்   இன்றும்,                                              
என்னுள் உறைந்து இருக்கின்றாய்...                                                             
என் சுவாசக் காற்றே!